கனேடியப் பழங்குடிகள்: புதிய வாழ்வும் சவால்களும் காலனித்துவமும் – பகுதி 6
வட சமவெளிப் பிரதேசங்களில் வாழ்ந்த பெண்கள் தம் குடும்ப பொருளாதாரத்தில் எப்பொழுதும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார்கள். காட்டெருமை காலத்தில் பெண்கள் காடுகளுக்குச் சென்று பழங்களைப் பறித்து தம் குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்தினர். அல்லது அருகிலுள்ள உள்ளூர் சந்தைகளில் விற்றார்கள். சிகப்பு ஆறு (Red River) குடியிருப்புகளிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை மிருக தோல் வேட்டைக்காக செல்வார்கள். இதற்காக காட்டெருமையிலிருந்து பிரதானமாக பாரம்பரியமாக செய்யப்படும் காய்ந்த இறைச்சிகளை பெண்கள் உருவாக்கினார்கள். இதனை மற்ற மிருகங்களிலிருந்தும் செய்வார்கள். இது தோல் வியாபாரத்தில் முக்கியமான பங்கையாற்றியது. வட அமெரிக்காவில் மிருக ஆடைகளின் மீது ஏற்பட்ட ஆர்வமும் அதனால் அதற்கான கோரலும் அதிகமானபோது காட்டெருமை ஆடைகளை உருவாக்கி விற்பனைக்கு அனுப்புவதில் பெண்களே முக்கியமான பங்கையாற்றினார்கள். காட்டெருமை தோல் ஆடையின் விழ்ச்சிக்குப் பின்னர் பெண்கள் தமது மரபார்ந்த பழக்கவழக்கங்களை புதிய பழக்க வழக்கங்களுடன் இணைத்து தங்கள் குடும்பத்தின் வருமானத்தை உறுதி செய்தார்கள்.
1800களின் கடைசியல் மிருக தோல் வியாபாரமும் பாரம்பரிய பொருளாதார செயற்பாடுகளும் சரிவை சந்தித்தன. உதாரணமாக அன்றைய வட சமவெளி பிரதேசங்களில், இன்றைய அல்பேட்டா, சஸ்கட்சுவான் மாகாணங்களில், காட்டெருமை அழிந்துபோனமையினால் அதனுடனான பொருளாதார செயற்பாடுகளும் முடிவுக்கு வந்தன. இதனால் அங்கு வாழ்ந்த First Nations and Métis பழங்குடி மக்கள் தமது பிரதான வருமானத்தை இழந்து நிர்க்கதியானார்கள். இதனால் பல பழங்குடி மக்களும் சமூகங்களும் நாட்கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆகவே அலைந்து திரிந்து வாழும் தம் வாழ்க்கைக்கு விடை கொடுத்துவிட்டு கிராம நகரப்புறங்களில் நிரந்தரமாக வசிப்பதற்கு முயற்சித்தனர். இவர்கள் வாழ்ந்த பிரதேசங்களையும் அங்குள்ள இயற்கை வளங்களையும் பொறுத்து இவர்களுக்கான நாட்கூலியின் பெறுமதிகள் வேறுபட்டன.
மேலும் பழங்குடி மக்கள் தம் வாழ்வாதாரத்திற்காக தமது பாராம்பரிய வேட்டையாடுதல் போன்ற தொழில்களை கைவிட்டு விவசாயம் போன்ற புதிய தொழில் முயற்சிகளில் பங்குபற்றினர். இவ்வாறுதான் ஐரோப்பிய பொருளாதார செயற்பாடுகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் இவர்கள் மாற்றப்பட்டார்கள். விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான் ஒரளவு நிலையான திருப்தியான வாழ்க்கை முறைகளுக்கு இருக்கின்ற ஒரே சாத்தியமான வழி என்பதை பழங்குடித் தலைவர்களும் தெரிந்துகொண்டார்கள். பழங்குடி மக்களின் குடியிருப்புகளில் பண்ணைகளும் விவசாயமும் ஆரம்பிக்கப்பட்டபின் பிரச்சனைகளும் ஆரம்பமாகின. 1876ம் ஆண்டு பழங்குடி மக்களுக்கு விவாய பண்ணைகள் செய்வது தொடர்பான வழிமுறைகளை வழங்கும்படி பழங்குடி மக்களின் முகவர்களுக்கு (Indian agents) கூறப்பட்டது. இந்த முகவர்களே பரந்த நிலங்களுக்கும் பொறுப்பாக இருந்ததுடன் இவர்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கிய பயிற்சிகள் முழுமையானவையல்ல. இதேநேரம் பழங்குடி மக்களும் தமக்கு கிடைத்த உபரணங்களுடன் விவசாயம் செய்யவிடப்பட்டார்கள். இவ்வாறான பிரச்சனைகளினாலும் வறட்சிகளினாலும் தம் வாழ்க்கைக்குத் தேவையான வருவாயை விவசாயம் மூலம் பெறமுடியவில்லை. புதிய சூழலுக்கு முகம் கொடுத்தமை இவர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றியது.
பொதுநிலத்தை வாங்குவதற்கான பத்திரம், அமெரிக்க கனடா எல்லைகளை கடப்பதற்கான ஆவணம் போன்ற பலவிதமான அரசாங்க கொள்கைகளை பழங்குடிப் பெண்கள் தம் வாழ்வின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ப சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். சிலர் தம்மால் முடிந்தபோது தோட்டக் காணிகளை, நிலங்களை வாங்கினார்கள். வாங்க முடியாதவர்கள் புதிய குடிவரவாளர்கள் அதிகமாக வந்ததினால் அவர்களுக்கு உதவ வியாபார நிலையங்களை (trading posts) நடாத்தினார்கள். சில பெண்கள் தம் கணவர்களுடன் இணைந்து பரந்த சமவெளிகளில் குப்பைகளாக இருந்த காட்டெருமைகளின் எலும்புகளை சேர்ப்பதில் பங்களித்தார்கள். இன்னும் சிலர் புதிய குடியிருப்பாளர்களுக்கு தேவையான விறகுகளை விற்றார்கள்.
புதிய குடியேறிகள் தாம் வாழ்ந்த இடங்களில் சிறிய நகரங்களை கட்டமைத்தார்கள். இந்த நகரங்களே இந்த நிலங்களை ஆதிக்கம் செய்வனவாக மாறின. இப் புதிய சமூகங்கள் பழங்குடி பெண்களுக்கு தம் தங்குமிடங்களிலும் உணவகங்களிலும் உடல் உழைப்பு வேலைகளை வழங்கினார்கள். மேலும் ஆடைகளை கழுவி சுத்தம் செய்கின்ற, தைக்கின்ற வேலைகளும் வழங்கப்பட்டன. பழங்குடி மக்களுக்கு தமக்கு உணவு வழங்கிய பாரம்பரியமான வேட்டையாடுதலுடன் ஒப்பிடும் பொழுது கூலிவேலைகள் இரண்டாம்பட்சமானவையே. இருப்பினும் புதிய சூழல் பெண்களின் உடலுழைப்பை வேண்டிநின்றன. பலவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களையும் செய்தார்கள். மணிகளைக் கொண்டு ஆடைகள், கையுறைகள் , புத்தகங்களுக்கான அட்டைகள் என்பவற்றை வடிவமைத்தார்கள். காட்டுமான்களின் தோல்களில் பல பொருட்களை செய்து புதிய குடிவரவாளர்களுக்கு விற்றார்கள். இந்தவகையில் இப் பெண்கள் தம் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பை செய்தார்கள். தம் சூழலில் மாறிவரும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தமது பாரம்பரிய திறமைகளையும் புதிய திறமைகளையும் கற்று ஒன்றுகலந்து உருவாக்கினார்கள்.
அதேநேரம் விவசாயப் பண்ணைகளிலிருந்து பழங்குடி மக்களுக்கு நல்ல வருமானம் கிடைத்தாலும் குடியேறியவர்கள் அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். இதனால் விவசாயப் பண்ணைகள் செய்த பழங்குடி மக்களுக்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. இதன்பின் பழங்குடி மக்கள் தமது பொருட்களை எந்த இடத்தில்? எந்த நேரத்தில்? என்ன விலைக்கு? யாருக்கு விற்க வேண்டும்? போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது பழங்குடி மக்களுக்கும் குடியேற்றக்காரர்களுக்கும் இடையில் எந்தவிதமான வியாபாரப் போட்டிகளும் நடைபெறுவதை இல்லாமல் செய்தது. தமது சொந்த வயலில் அறுவடை செய்யாதவர்கள் குடியேற்றக்காரர்களில் வயல்களில் கூலிக்கு வேலை செய்தார்கள். இவர்கள் தமக்கு கிடைத்த கூலியுடன் விவசாய அனுபவத்தையும் பெற்றார்கள்.
மிருக தோல் விற்பனையில் வீழ்ச்சி இருந்தபோதும், 1890யின் மத்தியிலிருந்து முதலாம் உலகப் போர் வரை மீண்டும் மிருக தோல் விற்பனையில் வளர்ச்சி ஏற்பட்டது. இதற்கு உலக சந்தையில் ஏற்பட்ட மாற்றங்களும் மிருக தோலிற்கு புதிய தொழிற்நூட்பங்களினால் நிறம் தீட்டக்கூடியதாக இருந்தமையும் காரணங்கள். மேலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிருக தோல் வியாபாரத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சி புதிய வியாபரிகளை வடக்கு நோக்கித் தள்ளியது. இவர்கள் புதிய நூகர்வோர்களை தேடினார்கள். இது வடக்கிலுள்ள சமூகங்களில் காணப்பட்ட புதிய போக்குவரத்து தொலைத் தொடர்பு வளர்ச்சிகள் இதனை மேலும் சாத்தியமாக்கியது. ஹட்சன் பே நிறுவனங்கள் சந்தையில் விலைகளைத் தனித்து தீர்மானிக்க முடியாதளவு இந்தப் புதிய தொலைத் தொடர்பு வசதிகள் பங்களித்தன. மேலும் 1920-30களுக்கும் இடையில் ஏற்பட்ட புகையிரத தொடர் வண்டி சேவைகள், நீராவி இயந்திர கப்பல்கள், மற்றும் புஸ் சிறியரக விமானங்கள் போன்றவற்றின் சேவைகள் இந்த வியாபாரத்தை மேலும் வளர்த்துச் சென்றன. இதனால் மிருக தோல் உற்பத்திகளை மிக விரைவாக சந்தைகளுக்கு கொண்டு செல்லும் வாய்ப்புகள் அதிகரித்தன. இவை ஹட்சன் பே கம்பனிக்குப் போட்டியாக புதிய கம்பனிகளின் வரவுகளுக்கும் வழிசமைத்தன. இந்த வியாபார வளர்ச்சியினால் பழங்குடி மக்கள் சிறிது நன்மை பெற்றனர். பழங்குடி மக்களும் தமக்குத் தேவையான பொருட்களை யார் மலிவாக விற்கின்றார்களோ அவர்களிடம் வாங்குவதற்கான சுதந்திரமும் கிடைத்தது.
1930ம் ஆண்டின் பின்பு கனேடிய அரசாங்கம் எத்தனை மிருகங்களை தோல்களுக்காக வேட்டையாடலாம் என்பதை தீர்மானித்தது. வாழ்வதற்காகவும் வியாபாரத்திற்காகவும் வேட்டையாடுதல் தொடர்பாக இரண்டு வகையான சட்டங்களை இயற்றினார்கள். இது பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு பிரச்சனையாக வந்தது. கனடாவின் சில மாநிலங்களிலும் பிரதேசங்களிலும் பழங்குடி மக்களின் வளங்களை அப் பிரதேசத்தின் “இந்தியன்” முகவர்களும் பொலிசாரும் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு பழங்குடி மக்கள் எப்பொழுது? எவ்வளவு? வேட்டையாடலாம் என்பதை தீர்மானித்தார்கள். இரண்டாம் உலகப் போரின்பின்பு மிருக தோல் வியாபாரம் மீண்டும் விழ்ச்சி கண்டதுடன் பழங்குடி மக்கள் புதிய தொழில் வாய்புகளை தேட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.
கனடாவின் மேற்குக் கரையோரங்களில் காணப்பட்ட மிக அதிகமான பல வகையான கடல் வளங்கள் அந்தக் கரையோரங்களில் வாழ்ந்த மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான வளமான வாழ்வை அளித்தன. ஊட்டச்சத்துகள் நிறைந்த பல வகையான மீன்கள் கிடைத்தன. இப் பிரதேச மக்கள் உணவுக்காக, வியாபாரத்திற்காக, கொண்டாட்டத்திற்காக என பல உற்பத்திகளைச் செய்தார்கள். பழங்குடி பெண்கள் மீன் பண்ணைகளில் மீன்களை பாத்திரங்களில் அடைக்கும் தொழிலை கூலிக்காக செய்தார்கள். ஆண்கள் வியாபார நிறுவனங்களுக்காக மீன் பிடித்தார்கள். நவீன பிரிட்டிஸ் கொலம்பியாவின் பொருளாதார வரலாற்றில் பழங்குடி மக்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தார்கள். 19ம் நூற்றாண்டின் இறுதியில் பழங்குடி மக்கள் கடல் வளத்தை எப்பொழுது பயன்படுத்தலாம்? எவ்வளவு பிடிக்கலாம்? என்பதுபோன்ற பல்வேறு சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் விதித்தது. மேலும் கடலுக்கு செல்வதற்காக அனுமதிப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமையானது, வாழ்க்கைக்காகவும் உணவுக்காகவும் வியாபாரத்திற்காகவும் கடல் வளங்களைப் பயன்படுத்திய பழங்குடி மக்களின் வாழ்வியல் முறைமைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதுடன் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியது. இதற்கு எதிரான போராட்டங்கள் நீண்ட காலமாக நடைபெற்று கனேடிய உயர் நீதிமன்றம் பழங்குடி மக்களின் கடல்வளங்களை அவர்கள் பயன்படுத்தவதற்கு அரசியலமைப்பில் பாதுகாப்பை வழங்கியது. அதேநேரம் மேற்குக் கரையோர பழங்குடி மக்கள் கூலி வேலைக்குச் சென்றமை, தொழிற்சங்கங்கள் அமைத்தமை, முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்தமை என்பன நவீன அரசியல் செயற்பாடுகளுக்கான முதற்படிகளாக அமைந்தன.
கனேடிய அரசாங்கம் பெரும்பாலான நிலங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. கியூபெக் அரசாங்கமும் கியூபெக் மின்சார கூட்டுத்தாபனமும் இணைந்து சென் யேம்ஸ் நீர் மின்சார உற்பத்தி திட்டத்தை 1971ம் ஆண்டு ஆரம்பித்தார்கள். இவர்கள் எவ்வாறு நிலத்தைப் பயன்படுத்துவது என்ற முறைமையை புறக்கணித்தார்கள். விளைவாக பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலம் வெள்ளத்தால் முழ்கியது. இதன் கழிவுகள் பழங்குடி மக்கள் பயன்படுத்துகின்ற ஏரியில் சென்று விழ்ந்தன. முக்கியமான கவனத்திற்குரிய பிரச்சனை அணை கட்டுவதால் ஏற்படும் நீர்த் தேக்கமானது சுற்றுச் சூழலையும் அதன் இயற்கை வளங்களையும் பாதிப்பதாகும். குறிப்பாக நீரில் வாழும் உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் முக்கியமானவை. இவை அனைத்தும் அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை பல வகைகளில் பாதித்தன. இதற்கு எதிரான போராட்டங்களை பழங்குடி மக்கள் முன்னெடுத்தார்கள். இந்த முரண்பாடுகளின் விளைவாக நவீன காலத்தில் புதிய நில ஒப்பந்தங்கள் செய்வதற்கு காரணமாகின. பழங்குடிமக்கள், கனேடிய அரசாங்கம், கியூபெக் மாநில அரசாங்கம், திட்டத்தை முன்னெடுத்த நிறுவனம் அனைவரும் இணைந்து உடன்பாட்டிற்கு வந்து ஒப்பந்தத்தில் James Bay and Northern Quebec Agreement கைச்சாத்திட்டார்கள். இதன்மூலம் பழங்குடி மக்களின் பாரம்பரிய வாழ்வு முறையை பாதுகாப்பதுடன் சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான புதிய வழிமுறைகளையும் கண்டுபிடித்தார்கள். அதேநேரம் பழங்குடி மக்கள் தம் நிலத்தின் மீதான உரிமையை இழந்தமையும் தமக்கான வருமானத்தை உறுதி செய்தமையும் இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சங்களாகும்.
கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்ந்த பழங்குடி மக்களின் வாழ்க்கை மெல்ல மெல்ல மேற்கத்தைய வாழ்வு முறைகளுக்கு மாறியது. கிராமங்களில் வாழ்ந்தவர்களுக்கு விவசாயம் முக்கியமான பொருளாதார காரணியானது. இதன் விளைவாக ஆண்களினதும் பெண்களினதும் சமூக குடும்ப பாத்திரங்களும் மாறின. வழமையாக பெண்கள் உணவுகளை சேகரித்தும், வீட்டு வேலைகளை செய்து கொண்டும் குழந்தைகளைப் பராமரித்தும் வளர்த்தார்கள். இதன்பின் பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்றும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். முதன்முறையாக கூலி வேலைக்குச் சென்ற பெண்களை வீட்டு வேலைகள் செய்வதற்கே பயன்படுத்தினார்கள். விவசாய வளர்ச்சியுடன் பெண்களும் ஆண்களுடன் இணைந்து வயல்களில் வேலை செய்ய ஆரம்பித்தார்கள். இவ்வாறான சமூக, பொருளாதார மாற்றங்களினால் குறிப்பாக பழங்குடி பெண்கள் பாலியல் வன்முறைகளையும் துஸ்பிரயோகங்களையும் வேண்டப்படாத கர்ப்பங்களையும் நோய்களையும் எதிர்கொண்டார்கள். மிகவும் மோசமான சுரண்டல்களுக்கு உள்ளானார்கள்.
முதலாவது உலகப் போரின் போது குறிப்பிட்டளவு அதாவது 4000 பழங்குடி மக்கள் கனடா சார்பாக பங்கு பற்றினார்கள். 1914ம் ஆண்டு மொத்த பழங்குடி மக்களின் தொகையே 100,000 தான். இவர்கள் போரில் பங்குபற்றியமைக்கு போக்குவரத்துச் செலவு, சாப்பாடு, நிலையான வருமானம். என்பன கிடைத்தமை முக்கியமான காரணம். ஆனால் 1918ம் ஆண்டு போர் முடிந்தபின் மற்ற படையினர்விட பல பிரச்சனைகளை பழங்குடிப் படையினர் எதிர்கொண்டார்கள். இந்திய விவகாரங்களுக்கான அமைச்சு இவர்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பழங்குடிப் படையினருக்கு இழப்பீடுகள் கிடைப்பதற்காக வட அமெரிக்காவில் பரந்த இந்தியர்களின் கழகம் League of Indians ஒன்றை உருவாக்கினார்கள். இவ்வாறு இரண்டாம் உலப் போரின் பின்பும் உருவாக்கினார்கள். ஆனால் பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு கிடைக்காமையினால் இவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
பழங்குடி மக்களின் குடியிருப்புகளிலிருந்து முதலில் வெளியே சென்று குடியேற்றக்காரர்களுடன் வாழ்ந்தவர்கள் பழங்குடிப் பெண்கள். பழங்குடிகள் அல்லாத வேறு ஆண்களை திருமணம் முடித்த பழங்குடி பெண்களுக்கு கனேடிய சட்டங்கள் பல நிர்ப்பந்தங்களை வழங்கியது. முக்கியமாக பெண்கள் பழங்குடி அடையாளத்துடன் இருந்தாலும் வேறு ஆண்களை திருமணம் முடித்தமையினால் தமது இந்தியக் குடியுரிமையை இழந்தார்கள். ஆனால் ஆணைத் திருமணம் முடித்த வேறு இனப் பெண்கள் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். மேலும் தாம் வாழ்ந்த நிலத்திற்குள் நூழைவதற்கான உரிமையை, பாரம்பரிய நிலத்தை. மரணத்தின் பின் அங்கு புதைக்கப்படுவதை, சடங்குகள், நிகழ்வுகள் என்பவற்றில் பங்கு பற்றுவதையும் இதனால் கிடைக்கப் பெறும் சமூக நலத்திட்டங்களையும் உரிமைகளையும் இழந்தார்கள். மேலும் வைத்தியர், சட்டத்தரணி போன்ற தொழித்துறைசார்ந்தவர்களாக இப் பெண்கள் இருந்தாலும் தமது இந்திய உரிமையை இழக்க வேண்டும். இது இந்தப் பெண்களின் குழந்தைகளையும் பாதித்தது. அதாவது இந்தப் பெண்கள் தமது சமூகத்திலிருந்து ஆன்மீகம், பொருளாதாரம், உணர்வு, உடல், எனப் பல வகைகளிலும் பிரித்து வைக்கப்பட்டார்கள். ஆனால் பழங்குடி ஆண் ஒருவர் இவ்வாறு வேறு பெண்ணைத் திருமணம் முடிந்தால் அவர் தனது இந்தியக் குடியுரிமையை இழக்கமாட்டார். இந்த சட்டங்கள் ஆணுக்கு பொருந்தாது. இவ்வாறு பழங்குப் பெண்கள் தாதி, சிகையலங்கார வேலைகளுக்குச் சென்றபோதும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்தார்கள். இந்தியச் சட்டத்தில் இவ்வாறு உள்ளமைக்கான காரணம் இந்தப் பெண்களை தனிமைப்படுத்துவதற்கும் பழங்குடி குடும்ப முறைகளை அழிப்பதற்கும் ஆகும். இவை பழங்குடி பெண்களுக்கு எதிரான ஒரு சட்டங்களும் புறக்கணிப்புகளுமாகும். இந்த சட்டங்களுக்கு எதிராக பெண்களும் மனித உரிமையாளர்களும் தொடர்ந்து போராடியபோதும் 1985ம் ஆண்டும் (Bill C31) 2011ம் ஆண்டும் (Bill C3) இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்தப் பழங்குடி பெண்களும் அவர்களது குழந்தைகளும் “இந்தியக்” குடியுரிமையை மீளப் பெற்றார்கள்.
கனடாவில் ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மாற்றங்கள் பழங்குடி மக்களை பாதித்தபோதும் பழங்குடி மக்களும் அதனோடு மாறினார்கள். தமது பாரம்பரிய வாழ்வு முறைகளை கடைப்பிடித்துக் கொண்டு வேலைகளும் செய்தார்கள். இவ்வாறு கனேடிய வளர்ச்சிக்குப் பங்களித்தபோதும் கனேடிய வரலாற்றில் இவர்கள் மதிக்கப்படவோ அதற்கான அங்கீகாரத்தைப் பெறவோ இல்லை என்பது தூரதிர்ஸ்டமானது.
அல்பேட்டா பல்கலைக்கழத்தின் பழங்குடி மக்களின் பீடம் நடாத்தும் பழங்குடி மக்கள் தொடர்பான கற்கை நெறியின் ஆறாவது பகுதி இது. இப்பாடத்தை தழுவி மொழிபெயர்த்து எழுதப்பட்டது.
உசாத்துணைகள்
Anderson, Kim. 2000. A Recognition of Being Reconstructing Native Womanhood,
Toronto, ON: Second Story Press.
Battiste, Marie Ann. 1995. “Introduction.” In First Nations Education in Canada: The
Circle Unfolds, edited by Marie Ann Battiste and Jean Barman, vii–xx.
Vancouver, BC: UBC Press.
—. 1998. “Enabling the Autumn Seed: Toward a Decolonized Approach to Aboriginal
Knowledge, Language, and Education.” Canadian Journal of Native Education 22
(1): 16–27.
Beavon, Daniel J. K., Cora Jane Voyageur, David Newhouse, eds. 2013. Hidden in
Plain Sight: Contributions of Aboriginal Peoples to Canadian Identity and Culture.
Toronto, ON: University of Toronto Press.
Campbell, Maria. 1973. Halfbreed. Toronto, ON: McClelland and Stewart Limited.
Carter, Sarah. 1990. Lost Harvests: Prairie Indian Reserve Farmers and Government
Policy. Montreal, QC: McGill-Queen’s University Press.
—. 1999. Aboriginal People and Colonizers of Western Canada to 1900. Toronto, ON:
University of Toronto Press.
Castellano, Marlene Brant, Lynne Davis, and Louis Lahache. 2000. Aboriginal
Education: Fulfilling the Promise. Vancouver, BC: University of British Columbia
Press.
Douaud, Patrick C., ed. 2007. The Western Métis: Profile of a People Regina. Regina,
SK: The University of Regina Press.
Farrell Racette, Sherry. 2006. “Sewing for a Living: The Commodification of Métis
Women’s Artistic Production.” In Contact Zones: Aboriginal and Settler Women in
Canada’s Colonial Past, edited by Katie Pickles and Myra Rutherdale, 17–46.
Vancouver, BC: University of British Columbia Press.
—. 2012. “Nimble Fingers and Strong Backs: First Nations and Métis Women in Fur
Trade and Rural Economies.” In Indigenous Women and Work: From Labour to
Activism, edited by Carol Williams, 148–162. Chicago, IL: University of Illinois
Press.
Grand Council of the Crees of Quebec. 1995. Sovereign Injustice: Forcible Inclusion of
the James Bay Crees and Cree Territory into a Sovereign Quebec. Nemaska,
QC: Grand Council of Cree’s.
24
Haggarty, Liam J. 2013. “Métis Economic: Sharing and Exchange in Northwest
Saskatchewan.” In Métis in Canada: History, Identity, Law & Politics, edited by
Christopher Adams, Gregg Dalg, and Ian Peach, 205–248. Edmonton, AB:
University of Alberta Press.
Harris, Douglas C. 2001. Fish, Law, and Colonialism: The Legal Capture of Salmon in
British Columbia. Canadian Electronic Library. Toronto, ON: University of Toronto
Press.
—. 2008. Landing Native Fisheries: Indian Reserves and Fishing Rights in British
Columbia, 1849-1925. Vancouver, BC: University of British Columbia Press.
Harring, Sidney L. 1998. White Man’s Law: Native People in Nineteenth-Century
Canadian Jurisprudence. Toronto, ON: University of Toronto Press.
Jamieson, Kathleen, and Canadian Advisory Council on the Status of Women. 1978.
Indian Women and the Law in Canada: Citizens Minus. Ottawa, ON: Minister of
Supply and Services Canada.
Lawrence, Bonita. 2004. “Real” Indians and Others: Mixed-Blood Urban Native Peoples
and Indigenous Nationhood. Vancouver, BC: University of British Columbia
Press.
Lux, Maureen. 2001. Medicine that Walks: Disease, Medicine, and Canadian Plains
Native People, 1880-1940. Toronto, ON: University of Toronto Press.
Kelm, Mary-Ellen. 2011. A Wilder West: Rodeo in Western Canada. Vancouver, BC:
University of British Columbia Press.
McCallum, Mary Jane. 2014. Indigenous Women, Work, and History, 1940-1980.
Winnipeg, MB: University of Manitoba Press.
McCutcheon, Sean. 1991. Electric Rivers: The Story of the James Bay Project.
Montreal, QC: Black Rose Books.
Meijer Drees, Laurie. 2002. The Indian Association of Alberta: A History of Political
Action. Vancouver, BC: The University of British Columbia Press.
Miller, Christine, and Patricia Marie Chuchryk. 1996. Women of the First Nations:
Power, Wisdom and Strength. Winnipeg, MB: University of Manitoba Press.
Newell, Dianne. 1993. Tangled Webs of History: Indians and the Law in Canada’s
Pacific Coast Fisheries. Toronto, ON: University of Toronto Press.
25
Palmater, Pamela D. 2011. Beyond Blood: Rethinking Indigenous Identity. Saskatoon,
SK: Purich Publishing.
Ray, Arthur J. 2011. An Illustrated History of Canada’s Native People: I Have Lived
Here Since the World Began. Montreal, QC: McGill-Queen’s University Press.
Sheffield, Scott R. 2005. “Aboriginal Contributions to Canadian Culture and Identity in
Wartime: English Canada’s Image of the ‘Indian and the Fall of France, 1940.” In
Hidden in Plain Sight: Contribution of Aboriginal Peoples to Canadian Identity
and Culture, edited by David R. Newhouse, Cora J. Voyageur, and Dan Beavon,
Toronto: The University of Toronto Press.
Stonechild, Blair. 2006. The New Buffalo: The Struggle for Aboriginal Post-Secondary
Education in Canada. Winnipeg, MB: University of Manitoba Press.
Tough, Frank. 1996. As Their Natural Resources Fail: Native People and the Economic
History of Northern Manitoba, 1870-1930. Vancouver, BC: The University of
British Columbia Press.
Tsioniaon LaFrance, Brenda. 2000. “Culturally Negotiated Education in First Nations
Communities: Empowering Ourselves for Future Generations.” In Aboriginal
Education Fulfilling the Promise, edited by Marlene B. Castellano, Lynne Davis,
and Louise Lahache, 101–113. Vancouver, BC: University of BC Press.
Winegard, Timothy C. 2014. For King and Kanata: Canadian Indians and the First World
War. Winnipeg, MB: The University of Manitoba Press
Leave a comment